முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த சீமான், மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவையொட்டி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரையும், துணை முதல்வர் உதயநிதியையும் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- மு.க.முத்துவின் மறைவு மிகவும் வருத்தமாக இருந்தது. துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள நேரில் செல்ல முடியவில்லை. எனவே, முதலமைச்சரையும் துணை முதல்வரையும் சந்தித்து இரங்கல் தெரிவித்தேன். அரசியல் பாதை மற்றும் கொள்கை நிலைப்பாடுகள் வேறு என்றாலும், அதையும் தாண்டி ஒரு உறவு இருக்கிறது.

கொள்கைகள் வேறு. மனித உறவுகள் மற்றும் கண்ணியம் வேறு. ஒருமுறை, வெயிலில் நீண்ட நேரம் நின்று மயக்கம் அடைந்தபோது, ஸ்டாலின் என்னைத் தொடர்பு கொண்டு, என் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதேபோல், என் தந்தை இறந்தபோது, அவர் எனக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், அமைச்சர் பெரியகருப்பனை அருகில் இருந்து தேவையான விஷயங்களைச் செய்ய வைத்தார்.
இவை அனைத்தும் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனித கண்ணியம் மற்றும் பண்பு. இந்த நாகரிகம் இந்த மண்ணிலிருந்து மறைந்து விட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக மலர வேண்டும். தவெக கட்சித் தலைவர் விஜயிடம் இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. அவரது பாதை மாறிவிட்டது. பயணம் மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.