தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சிகள் மாநகர அளவிற்கு தரம் உயர்த்த பாடுபடுவேன். திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் வெகுவாக சென்றடைந்துள்ளது. சொன்னதை மட்டுமல்ல… சொல்லாததையும் செய்ததுதான் திராவிட மாடல் அரசு என்று தஞ்சாவூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் மாநகராட்சி பகுதியில் 32,33,34 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தஞ்சை வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வெட்டுக்கார தெரு, செங்கலாச்சியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு நகர், தெருவாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேளதாளம் முழங்க வேட்பாளருடன் எம்.பி.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் நீலகண்டன் சுந்தர செந்தில் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சூழ வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்க பெண்கள் ஆரத்தி எடுத்து திலகம் இட்டு வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேயராக இருந்து அற்புதமாக செயல்பாட்டை செய்து காட்டிய நீங்கள்தான் தஞ்சாவூரின் எம்எல்ஏ என்று வாக்கு சேகரித்தபடி வந்த திமுக வேட்பாளர் சண்.ராமநாதனை பாராட்டி பெண்கள் பல பகுதிகளில் மாடிகளில் இருந்து மலர் தூவி வெற்றி பெற வாழ்த்தினர். தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வேட்பாளர் முன்வைத்தனர். கோரிக்கைகள் முழுவதையும் வெற்றி பெற்ற உடன் நிறைவேற்றித் தருவதாக வேட்பாளர் சண்.ராமநாதன் வாக்குறுதி அளித்தார்.
பின்னர் மாலை தஞ்சை கிழக்கு ஒன்றியம் நாஞ்சிக்கோட்டை பகுதியில் வேட்பாளர் சண்.ராமநாதன் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் சண்.ராமநாதன் பேசுகையில்,
தஞ்சை மாநகராட்சி மேயராக நான் பணியாற்றிய போது மாநகர் முழுவதும் சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் அகலப்படுத்தப்பட்டது. அதேபோல அனைத்து முக்கிய பகுதிகளிலும் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. தேவைப்படும் இடங்களில் ரவுண்டானா அமைக்கப்பட்டு கோபுர ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டன. தற்போது மாநகராட்சியுடன் அருகில் உள்ள ஊராட்சிகளும் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அத்தனை ஊராட்சிகளையும் மாநகராட்சி அளவிற்கு தரம் உயர்த்த பாடுபடுவேன். தரமான சாலை குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களுக்கு அடிப்படை தேவைகள் முதல் வேலை வாய்ப்பு, வேளாண் சார்ந்த தொழில் திட்டங்கள், ஐடி தொழில் பூங்கா கொண்டு வருவதற்கு பாடுபடுவேன்.

முத்தாய்ப்பாக நமது திமுக தேர்தல் அறிக்கை பேசும் பொருளாக ஆகி உள்ளது. தற்போதைய வாக்குறுதிகளான மாதம் தோறும் ரூ.1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை என்பதை இனி ரூ.2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்துல கல்லூரி மாணவர்களுக்கு தற்போது மாதம் ரூ. 1,000 வழங்கப்படுவது இனி அது ரூ.1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இல்லத்தரசிகள் தங்களுடைய வீட்டுக்கு தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோவேவ் அவன், இன்டக்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை புதுசா வாங்க தலா 8000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கையில் ஹைலைட் ஆகும். மேலும் நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை: லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை: இனி மாதம் ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை: ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். ரூ.8,000-லிருந்து ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மீன்பிடி குறைவுகால நிவாரணம்: ரூ.6,000-லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும். எனவே உங்கள் வாக்குகளை வெற்றி சின்னம் உதய சூரியன் சின்னத்திற்கு அளித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் செய்தார்.