சென்னை: எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் தமிழக அரசோ, முதலமைச்சரோ பணிய வேண்டிய சூழல் இல்லை என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொள்கை, மாநில உரிமை மற்றும் சமூக நீதி குறித்து திமுக பேசுவதாகவும், ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் காரணமாக தற்போது பாஜகவின் பிடியில் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.
அரசியல் ரீதியாக தேர்தல் நேர கூட்டணி அமைப்பதைத் தாண்டி, தங்களது கொள்கைகளை விட்டுக்கொடுத்து குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பதற்காக சில முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அழுத்தத்துக்கு அஞ்சமாட்டோம்
“எந்த அழுத்தத்திற்கும் இந்த அரசோ, முதல்வரோ பணிவதற்கான சூழலே கிடையாது” என அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்பாக இருந்தாலும் சரி, அதன்பிறகு இருந்தாலும் சரி, எந்தவிதமான அழுத்தத்திற்கும் அரசு அஞ்சியதில்லை என்றும் அவர் கூறினார்.
காவிரி பிரச்னை
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், காவிரி பிரச்னைக்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை என்ற காரணத்தை கூறி தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணிப்பது சரியான முடிவு அல்ல எனக் குறிப்பிட்டார்.
தொகுதி மறுவரையறை என்பது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்து கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
