புதுடில்லி: இந்தியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தனது அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், தனது அமைப்பைச் சேர்ந்த 3,000 பேர் இன்னும் சுதந்திரமாக இருப்பதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஷசாத் பாட்டி வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கிடைத்த உளவுத் தகவலைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் ஷசாத் பாட்டியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் ஷசாத் பாட்டியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட 175 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 52 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு 12 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
