சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க 2012-ம் ஆண்டு முதல் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் பள்ளிகளில் பாடம் நடத்துகிறார்கள். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 12,500 தரப்படுகிறது.
இந்நிலையில் பணி நிரந்தரம் கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 1,700 பெண்கள் உட்பட 3,500-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழக அரசு தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

பகுதி நேர ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ”பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. ஆனால், அதற்கான முயற்சிகளை தமிழக அரசு இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. அதனால் தான் போராட்ட களத்திற்கு வந்துள்ளோம். எங்களின் நிலையை உணர்ந்து அவர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்” என்றார்.
இதனிடையே, பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விசிக துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.