கவுகாத்தி: உலகின் முதல் மூங்கில் எத்தனால் ஆலை அசாமில் அமைக்கப்படுவதாகவும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என்றும் ஆயில் இந்தியா தலைவர் ரஞ்சித் ராத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக அசாமில் நடைபெற்று வரும் ‘அட்வாண்டேஜ் அசாம் 2.0’ முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற கனவை நனவாக்க ஆயில் இந்தியா புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, உலகின் முதல் மூங்கில் எத்தனால் ஆலை அசாமின் நுமாலிகரில் அமைக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
எத்தனால் உற்பத்திக்கான மக்காச்சோள பயன்பாடு 50 சதவீதம்: தமிழ்நாட்டில் கோழி தீவன பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எத்தனால் உற்பத்திக்கான மக்காச்சோள பயன்பாடு 50 சதவீதம்: தமிழ்நாட்டில் கோழி தீவன பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது
இந்த இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலையை ஆயில் இந்தியாவின் கீழ் உள்ள ‘நுமாலிகர் சுத்திகரிப்பு’ நிறுவனம் அமைத்து வருகிறது. இந்த ஆலை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும். நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் கிடைப்பது இதற்கு பெரும் உதவியாக உள்ளது.
இது தவிர, ஆயில் இந்தியாவும் பயோகேஸ் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் துறையிலும் பல வாய்ப்புகள் இருப்பதால், அதற்கும் கவனம் செலுத்தப்படுகிறது. அவர் இவ்வாறு கூறினார்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பு இலக்கை 20 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். இது தொடர்பாக நிதி ஆயோக் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
2026 ஆம் ஆண்டுக்குள் 20 சதவீத எத்தனால் கலப்பை அடைவது இலக்கு என்றாலும், அது ஏற்கனவே 19.60 சதவீத கலப்பை எட்டியுள்ளது என்றும், அடுத்த மாதத்திற்குள் 20 சதவீத இலக்கை அடைய முடியும் என்றும் அவர் கூறினார். பல்வேறு வகையான எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா ரூ.13 லட்சம் கோடியை செலவிடுவதாகவும், இதைக் குறைக்க ஏற்கனவே எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு கூடுதலாக, பச்சை ஹைட்ரஜனுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.