ஜார்க்கண்ட்: பங்குச்சந்தை சரிவடைந்ததால் அதில் முதலீடு செய்து பணத்தை இழந்த ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்டில் பங்ச்சந்தையில் பணத்தை இழந்ததால் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சிட்கோரா காவல் பகுதியில் வசித்தவர் சஞ்சீவ் குமார் (25 வயது). இவருக்கு ஒரு மூத்த சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
குமார், ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் பங்குச் சந்தையில் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பங்கு விலைகள் சரியத் தொடங்கியதால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பங்குச் சந்தையில் தனது பணத்தை இழந்ததால் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில், பலமுறை கதவைத் தட்டியும் அவர் பதிலளிக்காததால், அவரது குடும்பத்தினர் அவரது அறைக்குள் நுழைந்து பார்த்தபோது கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இருப்பதைக் கண்டனர்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவிட்டனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வளர்கின்றனர்.