கோவை : சவுக்கு சங்கர் மீதான வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவை: சவுக்கு சங்கர் மீதான, 11 வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, கோவை சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர், ‘சவுக்கு மீடியா’ என்ற யு டியூப் சேனல் நடத்தி பிரபலமானவர். இவர், ‘ரெட்பிக்ஸ்’ என்ற யு டியூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது, பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து, தரக்குறைவான, அவதூறு கருத்துக்களை தெரிவித்தார்.
புகாரின் பேரில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கடந்தாண்டு மே 4ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது, கஞ்சா கடத்தல் உட்பட மாநிலம் ழுழுவதும் மொத்தம், 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால் குண்டர் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டார். சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த, ‘ரெட்பிக்ஸ்’ யு டியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார். இருவரம் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது தேனியில் கஞ்சா கடத்தல் வழக்கு தவிர, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பதிவான 11 அவதுாறு வழக்குகள், அனைத்தையும் ஒரே கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி, அனைத்து வழக்குகளும் கோவை சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளன. பிற மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள வழக்குகளை சேர்த்து, கோவை ஜே.எம்:4, கோர்ட்டில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.