விக்ரம் நடிப்பில் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவான ‘வீர தீர சூரன்’ திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், படம் ரிலீசுக்கு முன்னதாக ஒரு வழக்கால் தடை விதிக்கப்பட்டது. இந்த படத்தில் முதலீடு செய்த IVY என்ற நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்.

அந்த நிறுவனம் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்வதற்குள்ளாகவே ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்துவிட்டதாகவும், இதனால் தங்களால் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்ய முடியவில்லை என்றும் அந்த நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடையை அறிவித்தது. அதன் பின்னர், வழக்கு தீர்ந்த பிறகு மாலை நேரத்தில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
இப்போது வெற்றிகரமாக ஓடிவரும் இந்த படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள விக்ரம், “‘வீர தீர சூரன்’ படத்துக்கு பல சட்ட சிக்கல்கள் இருந்தன. இதனால் முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸாகவில்லை. இந்த படத்தை மக்கள் பார்க்கவேண்டும் என போராடினேன். இப்போது படம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. என் ரசிகர்களுக்கு வித்தியாசமான, ஒரு மாஸ் படம் கொடுக்க வேண்டும் என்றுதான் இந்த படத்தில் நடித்தேன்” என்று கூறியுள்ளார்.