சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் அனுபவித்ததாக கூறப்படும் மன உளவியல் துன்புறுத்தல் குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் முதன்முறையாக விரிவாக பேசியுள்ளார். ஒரு உறவுக்குள் சென்ற பிறகு தன்னையே இழக்கத் தொடங்கியதாகவும், தற்போது தனது வாழ்க்கையை மீண்டும் தானே தேர்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘கொடி’, ‘பைசன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், “அமைதியை அடைய முடிவற்ற பாதைகளை விட்டுவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அவரது காதல் உறவு முடிவுக்கு வந்திருக்கலாம் என்ற தகவல்கள் பரவின.
தற்போது அளித்துள்ள புதிய பேட்டியில் அந்த பதிவின் பின்னணி குறித்து பேசிய அவர், அந்த பதிவு திடீரென எழுதப்பட்டதல்ல என்றும், அதன் பின்னால் நீண்ட காலமாக அனுபவித்த வேதனைகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
“இரண்டு ஆண்டுகளாக உடல் மற்றும் மன வேதனைகளை அனுபவித்தேன். நான் ‘நார்சிசிஸ்டிக் அப்யூஸ்’ எனப்படும் மன உளவியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன். அந்த உறவு தொடங்கிய பிறகு என்னையே நான் இழக்கத் தொடங்கினேன். என் உடல் எடை குறைந்தது. மலர வேண்டிய நான் மெல்ல சுருங்கிக் கொண்டே சென்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அனுபவத்தை சந்திப்பவர்களில் முக்கியமாக, தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதையே அடையாளம் காண முடியாதவர்களுக்குத்தான் அதிக ஆபத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுபமா மற்றும் நடிகர் துருவ் விக்ரம் இடையே காதல் இருப்பதாக கடந்த ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், சமூக வலைதளப் பதிவுகள் உள்ளிட்டவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. ஆனால் இருவரும் தங்கள் உறவு குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
தற்போது அனுபமா வெளியிட்டுள்ள கருத்துகள் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
