மும்பை: பிரபல நடிகை பிரணீதா சுபாஷ், பீமான அமாவாசையை முன்னிட்டு தனது கணவருக்கு பாதபூஜை செய்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘சகுனி’, ‘மாசு என்கிற மாசிலாமணி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரணீதா சுபாஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பீமான அமாவாசையை முன்னிட்டு தென்னிந்திய பாரம்பரிய முறையில் தனது கணவருக்கு பாதபூஜை செய்து வணங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், ‘பீமான அமாவாசை’ என பதிவிட்டுள்ளார்.
கர்நாடகம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் பீமான அமாவாசை பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துக்காக சிறப்பு பூஜைகளை மேற்கொள்வது வழக்கம்.
பிரணீதா பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அவரது ரசிகர்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
