சென்னை: தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க வரும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து, அதிகாரிகளை தெரியும் எனக் கூறி சில இடைத்தரகர்கள் பணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு மனு அளித்தால் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது தினசரி 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் வருவதாக கூறப்படுகிறது.
மனு எழுதத் தெரியாதவர்களுக்கு உதவும் வகையில், தலைமைச் செயலகம் எதிரே உள்ள பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மனு எழுதிக் கொடுப்பவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இடைத்தரகர்களாக செயல்படத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அணுகும் சிலர், தங்களுக்கு அதிகாரிகளை நன்றாகத் தெரியும் என்றும், மனுவை நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவதாகவும் கூறுகின்றனர். இதற்காக ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
அரசு அலுவலகத்தை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி பணம் வசூலிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
