வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துகள் மீதான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வக்ஃப் வாரியத்தில் புதிய நியமனங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது நிலவி வரும் அமைப்பிலேயே தொடரவேண்டும் என்று நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது. இந்த தடை மே 5ஆம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணை வரை அமலில் இருக்கும்.
2025 ஏப்ரல் 4ஆம் தேதி அமலுக்கு வந்த வக்ஃப் சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டு, பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவை குறித்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. மத்திய அரசு இந்த மனுக்களுக்கு எதிராக வாதிட்டபோதும், நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க விரும்புவதாகக் கூறியது.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பதில் மனு தாக்கல் செய்ய ஏழு நாட்கள் அவகாசம் கோர, அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பின்னர் மனுதாரர்களும் ஐந்து நாட்களுக்குள் தங்களது மறுப்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திருத்தச் சட்டம் வக்ஃப் வாரிய அமைப்பை மாற்றுவதுடன், முஸ்லிம் அல்லாதவர்களையும் உறுப்பினர்களாக சேர்ப்பதை கட்டாயமாக்குவதால் அரசியலமைப்புக்கு முரணாகும் என்றும், இது முஸ்லிம்களின் சொத்துகளை பறிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால், மத்திய அரசு இந்தச் சட்டம் சீர்திருத்தம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டது என வாதிடுகிறது.