தூத்துக்குடி: டிஜிட்டல் கைது என மிரட்டி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 61 வயது முதியவரிடம் ரூ.48.80 லட்சம் மோசடி செய்ததாக வேலூரைச் சேர்ந்த இளைஞரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த முதியவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், தங்களை குற்றப்பிரிவு போலீஸார் என அறிமுகப்படுத்தினர். மேலும், பயங்கரவாதி ஒருவரின் செல்போன் எண், அவரது ஆதார் அட்டையை பயன்படுத்தி வாங்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர், தன்னை இந்தப் பிரச்சினையில் இருந்து விடுவிக்க உதவுமாறு கேட்டுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள், அவரிடம் இருந்து 3 தவணைகளாக ரூ.48.80 லட்சத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், வேலூர் ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்த சாபுதீன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மோசடியில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க விசாரணை நடைபெற்று வருகிறது.
டிஜிட்டல் கைது என்ற பெயரில் போலீஸ், சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புகளை நம்ப வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
