சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 5,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து அதிக பேருந்துகள்
கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று முதல் தொடர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இன்று 585 பேருந்துகள், நாளை 1,255 பேருந்துகள், நாளை மறுநாள் 1,030 பேருந்துகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 650 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாதவரத்திலிருந்தும் சிறப்பு சேவை
மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரிக்கு தினமும் 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
செப்டம்பர் 15-ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக அனைத்து பகுதிகளிலிருந்தும் 765 சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்பதிவில் ஆயிரக்கணக்கானோர்
விடுமுறை பயணத்துக்காக ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்குமாறு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
