புதுடெல்லி: டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற ரேகா குப்தா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தது. சமீபத்தில் புதிய அரசின் பதவியேற்பு விழாவில் ரேகா குப்தா முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, டெல்லியின் மகளாக மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
பிரதமருடனான சந்திப்பின் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்ட ரேகா குப்தா, “பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், இரட்டை எஞ்சின் அரசு மக்கள் நலன் மற்றும் நல்லாட்சியின் பாதையில் பயணிக்கும். இதன் மூலம், வளர்ந்த டெல்லி மக்களின் கனவை நனவாக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், டெல்லியில் தரமற்ற சாலைகள் சீரமைப்பு மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைத் திட்டங்களை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.