சென்னை: நடிகர் அருண் விஜய் – இயக்குநர் முத்தையா முதன்முறையாக இணையும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் 12-ந்தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைத்தேர்வுகள் மற்றும் அதிரடி ஆக்ஷன் திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் அருண் விஜய். தற்போது தனது 38-வது திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இப்படத்தை ‘கொம்பன்’, ‘விருமன்’ உள்ளிட்ட கிராமத்து பின்னணியில் வெற்றி பெற்ற திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்குகிறார். அருண் விஜய் – முத்தையா கூட்டணியில் உருவாகும் முதல் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முத்தையாவின் வழக்கமான கிராமத்து செண்டிமெண்ட் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் இப்படம் உருவாகி வருகிறது. கதாபாத்திரத்திற்காக அருண் விஜய் தனது உடலமைப்பையும் கட்டுமஸ்தான, மிரட்டலான தோற்றத்துக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக மிர்ணா நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ‘நேதாஜி ப்ரொடக்ஷன்ஸ்’ சார்பில் சண்முகவேல் பாண்டியன் தயாரிக்கிறார்.
தற்போது தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் முக்கியமான ஆக்ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 12-ந்தேதி வெளியாகிறது.
