புது டில்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிப்பதை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக வாதிட்டார். புகார் அளித்த நபரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
சிபிஐ தரப்பில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவையாக இருந்தால் அவற்றை சரிபார்க்கும் நடவடிக்கை மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எஃப்ஐஆர் பதிவு செய்வது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கின் ஆவணங்களை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணையில் அவரது தரப்பு விளக்கத்தையும் கேட்கலாம் என தெரிவித்தது. மேலும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டாம் என மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு அறிவுறுத்தியது.
