சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் மட்டுமின்றி, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுபோன்ற இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் தமிழக மீனவர்கள் மத்தியில் கவலையும் பாதுகாப்பற்ற உணர்வும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது வரை 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசின் காவலில் இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசிடம் பேசி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பது பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழக மீனவ சமூகத்தினருக்கும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
