புதுடில்லி: பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை என்று ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கம் அளித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர் என்றும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த நடவடிக்கை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளிடம் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அமெரிக்க NSA மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, UK NSA ஜோனாதன் பவல், சவுதி அரேபியா NSA முசைத் அல் ஐபன், ஐக்கிய அரபு அமீரக NSA ஷேக் தஹ்னூன் மற்றும் ஜப்பானின் NSA மசடகா ஒகானோ உள்ளிட்ட பல நாடுகளின் NSA-க்களுடன் அஜித் தோவல் பேசினார்.
மேலும் சீன வெளியுறவு மந்திரி வாங் இ, பிரான்ஸ் அதிபரின் ஆலோசகர் மற்றும் ரஷிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செர்ஜி ஷோய்குவுடனும் தொடர்பு கொண்டு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. அதேபோல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளிடம் தொடர்பு கொண்டுள்ளார்.
நிலைமையை மேலும் தீவிரமாக்கும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை என்றும், பாகிஸ்தான் தீவிரமடைய முடிவு செய்தால் உறுதியாக பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் அஜித் தோவல் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான பேச்சில் வலியறுத்தியதாக கூறப்படுகிறது.