சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23-ம் தேதி இரவு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த வழக்கை விசாரிக்க 3 ஐபிஎஸ் அதிகாரிகள், துணை போலீஸ் கமிஷனர்கள் சினேகா பிரியா (சென்னை அண்ணாநகர்), ஐமான் ஜமால் (ஆவடி), பிருந்தா (சேலம்) ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் பதிவு செய்த எப்.ஐ.ஆர்., கைது செய்யப்பட்ட ஞானசேகரன் விவரம், விசாரணை விவரம் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு நேற்று விசாரணையை தொடங்கியது. ஞானசேகரனின் செல்போனில் இருந்த வீடியோக்கள், எப்ஐஆர் தகவல்கள் கசிந்தது, 14 பேர் பார்த்தது குறித்தும் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தன் சொந்த முயற்சியில் எடுத்துள்ளது. விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கமிஷன் உறுப்பினர் மம்தா குமாரி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீட்சித் ஆகியோர் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவை அமைத்து கமிஷன் தலைவர் விஜய ரஹத்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த குழு இன்று விசாரணையை தொடங்க உள்ளது.