சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூகநீதித் துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிட மக்கள் சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக 100 சமுதாயக் கூடங்கள் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்கும் வகையில் ‘அகம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் கீழ் 2,500 கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக ரூ.160 கோடி மதிப்பீட்டில் 150 சமூகநீதி விடுதிகள் கட்டப்படும் என்றும், விடுதி மாணவர்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்கும் வகையில் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிட குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ‘விடிவெள்ளி மகளிர் வாழ்வாதாரத் திட்டம்’ செயல்படுத்தப்படும் எனவும், வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்களுக்காக ‘இனிய இல்லம்’ திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளை முறையாக நிர்வகிப்பதுடன், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘அரண் – விடுதி பராமரிப்பு மேலாண்மை’ அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் கல்விக்கு உகந்த தங்குமிடச் சூழலை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் கோவையில் வணிக மையம் அமைக்கப்படும். உதகையில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை விரிவுபடுத்தும் வகையில் சென்னை நந்தனத்தில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பழங்குடியின மாணவர்களின் மருத்துவம் மற்றும் பொறியியல் உயர்கல்வியை அதிகரிக்கும் வகையில் சிறப்பு கல்வி உதவித்தொகைத் திட்டமும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
