மும்பை: மும்பையைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் ஸ்ரீநாராயணன் என்பவர் நடிகை சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் வெபர் மற்றும் மேலாளர் சன்னி ரஜானி ஆகியோருக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டு அந்தேரி நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.
தெலுங்கு திரைப்படம் ஒன்றில் சன்னி லியோனுக்கு வாய்ப்பு பெற்றுத்தந்ததற்காக, ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.1.75 கோடி மற்றும் 10 சதவீத கமிஷன் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஒரு பகுதி தொகையை மட்டும் வழங்கிவிட்டு மீதித் தொகையை தரவில்லை என்றும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.
மேலும், மோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அந்தேரி நீதிமன்றம், குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து ஓம்பிரகாஷ் மும்பை திண்டோஷி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.ஏ. சானே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மோசடி மற்றும் நம்பிக்கை மீறலை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் இருந்தபோதிலும் முந்தைய நீதிமன்றம் அவற்றை உரிய முறையில் பரிசீலிக்கவில்லை என வாதிடப்பட்டது.
மறுபுறம், சன்னி லியோன் தரப்பில், புகாரில் குறிப்பிடப்பட்ட குற்றங்களுக்கு தேவையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரம் மோசடி குற்றமாக கருதுவதற்கான ஆதாரங்கள் இல்லாத ஒரு ஒப்பந்தத் தகராறு மட்டுமே எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்தேரி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனால் சன்னி லியோன் உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.
