புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள வக்பு வாரியங்களின் சொத்துகளை ஒழுங்குபடுத்தும் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, கடந்த குளிர்கால கூட்டத் தொடரின் போது மத்திய அரசால் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, இது பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
பா.ஜ. மூத்த தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டுக் குழு, கடந்த ஆறு மாதங்களில் பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, வக்பு சொத்துக்களுக்கு உடமை உரிமையுடையவர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டது.
இதன் விளைவாக, மசோதாவிற்கு 14 திருத்தங்களை கூட்டுக் குழு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை பார்லிமென்டில் தாக்கல் செய்யும் முன், மத்திய அமைச்சரவையின் அனுமதி தேவைப்பட்டது. இதற்கமைய, இன்றைய கூட்டத்தில் மத்திய அமைச்சரவை 14 திருத்தங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் மார்ச் 10ம் தேதி தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில், மத்திய அரசு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.