சென்னை : ரெட்ரோ படத்திற்காக தமிழ் டப்பிங் சொந்தக் குரலில் பேசுகிறார் நடிகை பூஜா ஹெக்டே என்று தகவல்கள் வெளியாகி உள்ளன
நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. முன்னதாக டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு காட்சி காமிக்ஸ் வடிவில் வெளியாகி இருந்தது. மேலும், வாரத்திற்கு ஒன்று என்ற கணக்கில் படப்பிடிப்பு காட்சிகளை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, 5-வது வார படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே ரெட்ரோ படத்தில் புதிய முயற்சியாக தனது சொந்தக் குரலில் தமிழில் டப்பிங் பணியை மேற்கொண்டு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.