சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் நடைபெற்ற செகுட்டையனார் மற்றும் சிறைமீட்ட அய்யனார் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி நடைபெற்ற புரவி எடுப்பு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மு.சூரக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு செகுட்டையனார் மற்றும் அருள்மிகு சிறைமீட்ட அய்யனார் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழாவையொட்டி பிரசித்தி பெற்ற புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு விழாவிற்காக கடந்த வாரம் கோவில் நிர்வாகம் சார்பில் பாரம்பரிய குயவர்களுக்கு பிடிமண் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட குயவர்கள் மண் புரவிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் வேண்டுகோளின்படி தயாரிக்கப்பட்ட இரண்டு அரண்மனை புரவிகள் மற்றும் 300 நேர்த்திக்கடன் புரவிகள் உள்ளிட்ட மொத்தம் 302 புரவிகள் நேற்று மாலை சாமியாட்டத்துடன் புரவி பொட்டலுக்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு பலூன், கண்ணாடி, மாலைகள் உள்ளிட்ட அலங்காரங்களுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று மாலை வெள்ளி அரிவாள் மற்றும் சாட்டையுடன் பாரம்பரிய சாமியாட்டம் நடைபெற்றது.
பின்னர் 296 புரவிகளும், 100-க்கும் மேற்பட்ட மிதிலைகளும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு செகுட்டையனார் கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்டன.
மேலும் ஒரு அரண்மனை புரவி மற்றும் ஐந்து நேர்த்திக்கடன் புரவிகள் சிறைமீட்ட அய்யனார் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டன. கள்ளர்பட்டியில் பெண்கள் குலவையிட்டு ஆரத்தி எடுத்து பக்தர்களை வரவேற்றனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றும் தெய்வமாக கருதப்படும் செகுட்டையனார் மற்றும் சிறைமீட்ட அய்யனார் கோவில்களில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.