திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதால் ஆத்திரமடைந்த பெண்கள் ஒன்று திரண்டு மதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோம்பைப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் புகார் அளித்தும் அதுபற்றி போலீசார் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், மதுபாட்டில்களை சாக்கு பையில் எடுத்து வந்தனர். அதனை எடுத்து அவர்கள் சாலையில் போட்டு உடைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெண்கள் தரப்பில் கூறுகையில், எப்போது வேண்டுமானாலும் மதுபாட்டில்கள் கிடைக்கும் வகையில் விற்கின்றனர். பல முறை புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் நாங்களே களம் இறங்கி விட்டோம் என்றனர்.