புதுடில்லி: இந்தியாவின் அடுத்த பிரதமராக யாரை மக்கள் விரும்புகின்றனர் என்ற கேள்வியை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் 9.2 சதவீத ஆதரவுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா டுடே–சி வோட்டர் இணைந்து நடத்தியதாக கூறப்படும் இந்தக் கருத்துக்கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடி 48.7 சதவீத ஆதரவுடன் முதலிடத்திலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 27.1 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு 9.2 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாகவும், இதன்மூலம் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு தலைமை தாங்குவதற்கு சிறந்த தலைவர் யார் என்ற கேள்வியிலும் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக விஜய் 12.2 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வுக்காக நாடு முழுவதும் 25,184 பேரிடம் நேரடியாக கருத்துகள் பெறப்பட்டதாகவும், கடந்த ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 91,795 நேர்காணல்கள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2029 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ள நிலையில், தமிழகத்தைத் தாண்டி விஜய்யின் தேசிய அரசியல் குறித்த விவாதத்துக்கு இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.
