புதுடெல்லி: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், “தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்து விட கர்நாடகாவுக்கு என்ன பிரச்சினை?” என கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், கர்நாடக அணைகளில் தற்போது 78 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாகவும், விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட தண்ணீர் வந்து விட்டாலும், ஏற்கனவே ஏற்பட்டுள்ள பற்றாக்குறை நீரை ஈடுசெய்ய போதுமான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கர்நாடக அரசு தரப்பில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் மறுநாள் நடைபெற உள்ளதாகவும், தங்கள் தரப்பில் நீர் பங்கீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சினை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், தற்போதைய நிலவரம் தொடர்பான புதிய விவரங்களை இரு மாநிலங்களும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், கூடுதல் கோரிக்கைகள் இருந்தால் அந்த ஆணையத்திடம் முறையிடலாம் என்றும் அறிவுறுத்தினர்.
இதுவரை திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் தமிழகத்தால் பெறப்பட்ட தண்ணீரின் அளவு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
