சென்னை: நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘ரன்’ படம் நேற்று ரீரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
காதல், ஆக்ஷனில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 23 ஆண்டுகளுக்கு பிறகு மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘ரன்’ திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் ஏப்.24-ந்தேதி ரீரிலீஸ் ஆகும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ‘ரன்’ திரைப்படம் மீண்டும் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் இயக்குனர் லிங்குசாமி கூறியிருப்பதாவது:-
‘சிவகாசி’ திரைப்படமும் ஏப்.24-ந்தேதி வெளியாவதால், எங்களின் ‘ரன்’ திரைப்படத்தை வேறு ஒரு தேதியில் மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளோம், அது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் ‘ரன்’ திரைப்படம் நேற்று வெளியாகவில்லை.
கடந்த 2002-ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்து வெளியான படம் ‘ரன்’. காதல், ஆக்ஷனில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் வித்யாசாகர் இசையில் உருவான பாடல்களும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.