சென்னை: தனுஷ்- நயன்தாரா வழக்கில் வரும் ஏப்ரல் 9ல் இறுதி விசாரணை நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ என்ற ஆவணப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெட்பிளிக்ஸில் வெளியானது.
இதற்கு முன்பு வெளியான அந்த ஆவணப்படத்தின் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த காட்சியை உரிய அனுமதியின்றி அதில் பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க மறுப்பு தெரிவித்த கோர்ட்டு நெட்பிளிக்சின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஏப்ரல் 9ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.